கவிதைகள்

Thursday, May 19, 2011

அவள் என்னைப் பார்க்கும் போது

பூவொன்று என்னைப்பார்த்து
புன்னகைத்தது  அதிசயமாய்
பனித்துளிகள் என்மீது
கவித்துளிகள் பொழிந்திடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது

குயிலொன்று வாய் திறந்து
புது ராகம் இசைத்ததுவே
மயில் ஒன்று எனைச்சுற்றி
புது நடனம் புரிந்ததுவே
அவள் என்னைப் பார்க்கும் போது

நிலவொன்று அருகிலிருந்து
மலர்ககணைகள் எய்திடுமே
என் மீது  போர் தொடுக்க
பட்டாம்  பூச்சி பறந்திடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது

காற்றலையில் ஒருராகம்
என் காதில் கேட்டிடுமே
கானமொன்று புதிதாக
நானுமங்கே படித்திடுவேன்
அவள் என்னைப் பார்க்கும் போது

சிலநிமிடம் வான் வெளியில்
என் கால்கள் மிதந்திடுமே
விண்வெளிதான்  என்றெண்ணி
சிறகடிப்பேன் பறப்பதற்காய்
அவள் என்னைப் பார்க்கும் போது

கடும் வெயிலில் நடந்திடவே
நடுநடுங்கி உறைந்திடுவேன்
பனி மழைதான் என்றெண்ணி
போர்வைதனை போர்த்திடுவேன்
அவள் என்னைப் பார்க்கும் போது

கடலலைகள் நின்றதுபோல்
என் கண்கள் உணர்ந்ததுவே
உயிரில்லா என் இதயம்
உயிர் பெற்று துடித்ததுவே
அவள் என்னைப் பார்க்கும் போது

சில மலர்கள் எனைச்சுற்றி
காதல் கோலம் போட்டிடுமே
சில வேளை என் கண்கள்
எனை மறந்து நோக்கிடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது

காண மழை சில வேளை
காதல் மழை பொழிந்திடுமே
காவியங்கள் சில காலம்
நம் கதையை சொல்லிடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது

மலர் ஒன்றைப் பறித்திடுவேன்
அவள் கரங்கள் சேர்ப்பதற்காய்
மான் விழியாள் அவள் நோக்கி
என்காதல் உரைத்திடுவேன்
அவள் என்னைப் பார்க்கும் போது